நீங்கள் ஒரு நல்ல கணவரா?


சுயவிசாரணை செய்து பாருங்களேன்...!





திருமணத்தைப் பற்றி நினைக்கும் பொழுது உள்ளங்கள் உவகை அடைகின்றன. இன்னும் பொறுப்புள்ள சிலருக்கு, நமது வாழ்வில் ஒரு புது அத்தியாயம் துவங்க இருக்கின்றது என்பதை நினைத்து சற்று கலக்கம் கூட ஏற்படுவதுண்டு.

இந்த இரண்டுக்கும் மத்தியில் ஒரு உண்மையான முஸ்லிம் திருமணத்தைப் பற்றி நினைக்கும் பொழுது, அந்தத் திருமணத்தின் மூலம் விளைந்த பந்தத்தில், கணவன் என்ற அந்தஸ்தில் தன் மீது உள்ள பொறுப்புகள் என்ன? கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பது பற்றி அவன் சற்று கவனம் செலுத்துவது நல்லது. இவ்வாறு கவனம் செலுத்தாத போது, ஏற்படும் பிரச்னைகள் தான் குடும்ப வாழ்வில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. எனவே, கணவன் மீது மனைவிக்கு என்ன உரிமை இருக்கின்றது? மனைவி மீது கணவனுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றன? என்பது பற்றி இருவரும் அறிந்து கொள்வதன் மூலம் சரியான குடும்ப வாழ்வையும், ஆரோக்கியமான பந்தத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதனடிப்படையில், முதலில் திருமணத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது, இன்னும் குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிகாட்டுதல்கள் என்ன என்பது பற்றி ஒரு உண்மையான முஸ்லிம் அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். திருமண பந்தம் என்பதும் இன்னும் அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஒப்பந்தம் என்பதும் மற்ற ஒப்பந்தங்களை விட தனித்துவமானதாக இருக்கின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு மனிதன் திருமணம் செய்து கொண்டால், அதன் மூலம் அவனது மார்க்கத்தில் பாதியைப் பூர்த்தி செய்கின்றான். இன்னும் மீதி உள்ள பாதியைப் பூர்த்தி செய்வதற்கு இறையச்சம் ஒன்றே தேவையாக இருக்கின்றது. (மிஷ்காத்)

இன்னும் இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21)

திருமணத்தின் நோக்கம்


மேலே உள்ள இறைவசனம் மற்றும் திருத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைத் தங்களது கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டியது, ஒவ்வொரு முஸ்லிமின் மீது அடிப்படைக் கடமையாக இருக்கின்றது. எனவே, திருமணம் எனும் பந்தத்தில் நுழைகின்ற ஆணும் சரி அல்லது பெண்ணும் சரி, இருவரும் தாங்கள் எந்த நோக்கத்திற்காக திருமணம் எனும் பந்தத்தில் நுழைகின்றோம் என்பதை விளங்கி, இருவரும் தங்களுக்கிடையே உள்ள அந்த ஒப்பந்தத்தை சரி வர நிறைவேற்றியவர்களாக, தங்களது திருமணத்தை வெற்றிகரமானதாக மாற்றி அமைக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

இருவரும் இணைந்து தங்களது திருமண பந்தத்தை வெற்றிகரமானதாக வாழ்ந்து காட்டுவார்கள்; என்று சொன்னால், இறைவன் அந்தத் தம்பதிகள் மீது தனது அருட் கொடைகளைச் சொறிவதற்குத் தயாராக இருக்கின்றான். இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறிக் காட்டுகின்றான் :
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் (2:187)

திருமணம் எனும் பந்தம் மூலமாக, ஆடை எவ்வாறு உங்களை அலங்கரிக்கின்றதோ, பாதுகாக்கின்றதோ, உங்களை அழகுபடுத்துகின்றதோ அதனைப் போல, இருவரும் உங்களது இனிய உறவுகள் எனும் நற்குணங்களைக் கொண்டு, ஒருவர் மற்றவரை அலங்கரித்துக் கொள்ளுங்கள், பாதுகாத்துக் கொள்ளுங்கள், அழகுபடுத்திக் கொள்ளுங்கள் என்று திருமறை நமக்கு அறிவுறுத்துகின்றது.

இன்னும் திருமணத்திற்கு முன்பு இருவரும் தனித்தனியாக, பிறருடைய தேவையின்றி அதாவது இவர் அவருடைய தேவையின்றியும், அவள் இவருடைய தேவையின்றியும் வாழ்ந்தவர்கள் தான். ஆனால் திருணமத்திற்குப் பின்பு இந்நிலை நீடிக்கக் கூடாது. இப்பொழுது இவர்கள் இருவரல்ல. மாறாக, உடல்கள் வேறாக இருந்தாலும், உயிரால் - உறவால் - எண்ணங்களால் ஓருடலைப் போன்றவர்கள். எனவே ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வதன் மூலம் இல்லறம் எனும் நல்லறத்தை இனிமையான பூங்காவாக மாற்றக் கடமைப்பட்டுள்ளவர்கள் என்பதை புரிந்து செயல்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்பதையே மேலே உள்ள இறைவசனம் நமக்கு உணர்த்துகின்றது.

இப்பொழுது சமுதாய வாழ்வில் ஏற்படுகின்ற பிரச்னைகளில், குடும்பப் பிரச்னைகளில் தன்னைத் தனித்துப் பரித்து பிரச்னைகளிலிருந்து ஒதுங்கி வாழ முற்படுவது இருவருக்கும் அழகல்ல. ஏற்கனவே இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருவர் மற்றவரது சுமையைக் குறைக்கவும், இக்கட்டான சூழ்நிலைகளில் ஒருவர் சுமையை பிரிதொருவர் இறக்கி வைக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இருவரும் இணைந்து அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு, பரஸ்பரம் உதவிக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் குடும்பம் எனும் பூங்காவில் எப்பொழுதும் பசுமையைப் பூத்துக் குலுங்க வைக்க வேண்டும். இதனைத் தான் சமூக வாழ்வில் இஸ்லாம் காண விழைகின்றது.

அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள். பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள் பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், ''(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். (7:189)

இறைவன் தம்பதிகளில் இருவருக்கும் தனித்தனியான கடமைகளை ஒதுக்கி இருக்கின்றான். அவரவர் படைப்பின் உன்னதத்திற்கு ஏற்றவாறு அவை மாறுபடுகின்றன. இந்த கடமைகளும், உரிமைகளும் அவர்களால் மிகச் சிறப்பாக பேணப்படுமானால், நிறைவேற்றப்படுமானால், அவர்களது வாழ்வை சூது கவ்வாது, இடுக்கன்கள் ஏற்படாது, கஷ்டங்கள் தலைதூக்காது இன்னும் அவர்களைச் சுற்றி எப்பொழுதும் இறைவனது பாதுகாப்பு வளையம் சூழ்ந்து பாதுகாத்து வரக் கூடியதாக இருக்கும்.

இந்தக் கடமைகளையும், உரிமைகளையும் இருவரில் எவராவது ஒருவர் சரிவர நிறைவேற்றவில்லை என்று சொன்னால், அவர்கள் வாழ்வு இந்த உலக வாழ்வின் நரகமாக மாறி விடும். இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக!!
துரதிருஷ்டவசமாக இன்றைக்கு நமது இஸ்லாமியக் குடும்பங்கள் பல நரக வாழ்வைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மற்ற சமூகங்களைப் போலவே இஸ்லாமிய சமூகத்திலும் மணவிலக்கு அதிகரித்து வருவது இருவரும் தங்களது மார்க்கக் கடமைகள் என்னவென்றே அறியாததனால் வந்த விளைவினால் விளைந்தது தான்; இது என்றால் அது மிகையில்லை.
முக்கியமாக இஸ்லாமிய சகோதரர்கள் தங்களது கடமைகளையும், உரிமைகளையும் மீறிச் செயல்படுபவர்களாகவும், தங்களது மார்க்கக் கடமைகளை துச்சமாக மதித்து நடக்கக் கூடியவர்களாகவும் இருப்பதே இந்த சமூகக் கொடுமைக்குக் காரணமென்றால் அது மிகையில்லை.
எனவே, திருமண பந்தத்தில் நுழைகின்ற ஆண் முதலில், கீழ்க்கண்ட இந்தக் கேள்விகளை தனக்குள் எழுப்பிக் கொள்ளட்டும்.

கணவன் என்ற முறையில் என் மீது அவளுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன?
அவள் மீது எனக்குள்ள உரிமைகள் என்ன?
நான் அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?


இந்தக் கேள்விகளை என்றாவது நீங்கள் உங்களிடம் கேட்டிருக்கின்றீர்களா? நிச்சயமாக கேட்டிருக்க மாட்டீர்கள்! இந்தக் கேள்விகளுக்கு சரியான விடையை அளித்து விட்டீர்கள் என்று சொன்னால், அதன் தெளிவான பதிலையும் மார்க்க அடிப்படைகளுடன் கூடி விளங்கிக் கொண்டீர்கள் என்றால் உங்களது திருமணம் வெற்றிகரமானதது தான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று சற்று கவனம் செலுத்துங்கள். இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களாகிய இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்வு எவ்வாறிருந்தது என்று கேட்கப்பட்ட போது, அவர்களது வாழ்வு குர்ஆனாக இருந்தது என்று பதிலளித்தார்கள்.

எனவே, என்னருமைச் சகோதரர்களே! உங்களது வாழ்வு அமைதியான சுகந்தமானதாக இருக்க வேண்டுமென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வை ஆய்வு செய்து, அதன் படி திருமணம் எனும் பந்தத்தை அர்த்தமானதாக ஆக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
ஆரம்பப் புள்ளி
ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் இறைமார்க்கமான இஸ்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது. அல்லாஹ் அவன் அனைத்தையும் அறிந்தவன், நீதமானவன், எனவே அவன் அனைத்து ஜீவராசிகளின் மீதும் தனது கருணையைப் பொழிந்து, அவற்றிற்குத் தேவையான அத்தனை சட்ட ஒழுங்குமுறைகளையும் வகுத்தே தந்திருக்கின்றான். நமது அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வுகளையும் அதில் வைத்திருக்கின்றான். அவன் வழங்கியிருக்கின்ற சட்டங்கள் எதனையும் விட்டு விடாது, அத்தனைக்கும் தன்னகத்தே தீர்வுகளை வைத்திருக்கின்றது.

முஸ்லிமான கணவனின் குணநலன்கள் மற்றும் பண்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் இன்னும் அவற்றை எவ்வாறு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் இறைமார்க்கத்தில் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் அவற்றை எளிதாக நடைமுறைப்படுத்துவதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்வு மிகவும் உதவிகரமாகவும் இன்னும் படிப்பினையாகவும் அமைந்திருக்கின்றது.
இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)

மேலே உள்ள வசனத்தில் நம்மில் பலர் தவறாகவே புரிந்து வைத்திருக்கின்றோம். மார்க்க விஷயங்களான தொழுகை மற்றும் உடை போன்ற விஷயங்களுக்குத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களது முன்மாதிரியை அதிகம் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றோம். அவ்வாறல்ல, நமது முழு வாழ்க்கைக்கும் அவர் தான் முன்மாதிரியாவார்கள்.
ஒரு கணவர், ஒரு தந்தை இதற்குரிய முன்னுதாரணத்திற்கு நாம் யாரைத் தேடுவது என்ற கேள்வியே நம்மிடம் எழ முடியாத அளவுக்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்வு நமக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்களது முன்மாதிரியை விடுத்து வேறு யாருடைய முன்மாதிரியையும் நீங்கள் தேடுவீர்கள் என்று சொன்னால், அவர்களது தாக்கம் தான் உங்களிடம் காணப்படுமே ஒழிய, இஸ்லாமியத் தாக்கம் உங்களிடம் மலராது.

இஸ்லாம் அல்லாத கொள்கைள், வழிமுறைகள் உங்களது வாழ்வை வளப்படுத்தி விடும் என்று நினைக்கின்றீர்களா?
நம்முடைய பொருளாதாரங்கள் நம்முடைய குடும்பத்திற்காகவே அற்பணிப்பதற்காக சம்பாதிக்கப்பட்டவை என்று நினைக்கிறீர்களா? அல்லது
நம்முடைய பொருளாதாரங்கள் இஸ்லாம் கற்றுத்தராத வழிகளில் செலவழித்து, இறைமார்க்கத்தை பொடுபோக்கானதாக எடுத்துக் கொள்ளப் போகின்றீர்களா?

நமது வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் முன்மாதிரியாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வு நம் முன் உள்ளது. இன்னும் மனைவிமார்களிடத்தில் ஒரு கணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டுதலுக்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்விலிருந்து வழிகாட்டுதல்கள் நம்முன் நிறைந்து கிடக்கின்றன.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவிமார்களிடம் சிறந்தவர் எவரோ அவரே! என்னுடைய மனைவிமார்களைக் குறித்து நான் மிகவும் சிறந்தவனாக இருக்கின்றேன் என்று கூறினார்கள் (திர்மிதி).
நம்பிக்கை மற்றும் இறையச்சம்
இறைநம்பிக்கையும் மற்றும் இறையச்சமும் என்ற இந்த சொற்களும், அதன் அர்த்தங்களும் உங்களுக்குப் புதியவை அல்ல. அதா (ரலி) மற்றும் உபைதுல்லாஹ் இப்னு உமைர் (ரலி) ஆகிய இருவரும் ஒரு முறை இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்களிடம், அன்னையே! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குணநலன்கள் எவ்வாறு இருந்தது என்று கேட்டார்கள் :

இதனைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்களது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது, அழுதவர்களாகக் கூறினார்கள், ஒருநாள் இரவு படுக்கையை விட்டு (இரவுத் தொழுகையை நிறைவேற்றிட எண்ணி) எழுந்தவர்களாக, ஓ ஆயிஷா! என்னைத் தனியே செல்ல அனுமதியுங்கள், நான் என்னுடைய இறைவனைத் தொழ வேண்டும். (பின்பு) தன்னைத் தூய்மைப்படுத்தி (ஒளுச் செய்து) கொண்டு, தொழ ஆரம்பித்த அவர்களது கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் தரையை நனைக்கும் அளவுக்கு இருந்தது. பிலால் (ரலி) அவர்கள் வந்து காலை பஜ்ர் தொழுகைக்கான அழைப்பை விடுத்தார்கள். (அப்பொழுது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழுவதைப் பார்த்து விட்டு, ஓ! இறைத்தூதர் (ஸல்) அவர்களே! நீங்களுமா அழுகின்றீர்கள், இறைவன் தான் உங்களது முன், பின் பாவங்களை மன்னித்து விட்டானே? என்று கேட்டார்கள்.
நான் அதற்காகவாவது என்னுடைய இறைவனுக்கு நன்றியுடையவனாக இருக்க வேண்டாமா? என்று பதில் அளித்தார்கள். (இப்னு ஹிப்பான்)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய இறைவனுக்கு எந்தளவு நன்றியுடையவர்களாகவும், அற்பணிப்பு மிக்கவர்களாகவும், இறையச்சமிக்கவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள் என்பதற்கு, இது ஒரு சம்பவவே போதுமானதாகும். உங்களில் யாராவது தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினீர்கள் என்று சொன்னால், முதலில் நீங்கள் உங்களது உள்ளத்தில் இறையச்சத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது ஒன்றே, உங்களிடம் நற்செயல்களையும், நற்பண்புகளையும் இன்னும் இறைவன் அனுமதித்த வழிகளில் நடைபோடுவதற்கும் வழி அமைத்துக் கொடுக்கும். இன்னும் அத்தகைய வழிகளை எளிதாக்கவும் செய்யும்.

இன்னும் நீங்கள் உங்களது மனைவிக்கு நல்ல கணவனாக பரிணமிக்க வேண்டும் என்று விரும்பினீர்கள் என்று சொன்னால், இறைவனுடைய அச்சத்தை உங்களது உள்ளத்தில் வளர்த்துக் கொள்ளுங்கள். அது ஒன்றே – அந்த இறையச்சமே உங்களுக்கும் உங்களது மனைவிக்கும் இடையே உள்ள உறவுகளை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். இன்னும் அந்த இறையச்சமானது, நான் என்னுடைய மனைவிக்கு நான் துன்பம் விளைவித்தாலோ அல்லது அவளை அநீதமான முறையில் நடத்தினாலோ, அல்லது அவளை உடலலோ அல்லது வார்த்தைகளாலோ அவளை நோவினை செய்தால், அதற்குப் பிரதியீடாக நமக்கு இறைவன் தண்டனையை அல்லவா வழங்குவான், இன்னும் நாம் அவனைச் சந்திக்கின்ற நாளில் இதற்கு சரியான பதிலை நம்மைப் படைத்த இறைவனிடம் கூற வேண்டியதிருக்குமே என்ற உள்ளச்சம் அத்தகைய சந்தர்ப்பங்களில் இவனை உருக்கக் கூடியதாக இருக்கும்.

இதனைப் பற்றி ஹஸன் பின் அலி (ரலி) அவர்களிடம் ஒருமுறை ஒரு மனிதர் வினவுகின்றார் :
ஓ! ஹஸன் அவர்களே! எனக்கு ஒரு மகள் இருக்கின்றாள். அவளை நான் யாருக்குத் திருமணம் செய்து வைப்பது என்பதைக் கூறுங்களேன்? என்று வினவுகின்றார். அதற்கு அவர், அல்லாஹ்வை எவன் பயப்டுகின்றானோ அவனுக்கு உனது மகளைத் திருமணம் செய்து வையுங்கள். உண்மையிலே அவன் அல்லாஹ்வை அஞ்சியவனாக இருந்தால், அவன் அவள் மீது அன்பு கொண்டால், அவளைக் கண்ணிப்படுத்துவான். அவள் மீது இவனுக்கு விருப்பமில்லை என்றால், அவளை அடக்கி ஒடுக்கவும் மாட்டான், அல்லது (இறைவன் மீதுள்ள அச்சத்தால்) அவளை மோசம் செய்யவும் மாட்டான்.
கல்வி
ஒரு பெண்ணுக்குள்ள உரிமைகளில் தலையாயது எதுவென்றால், அவள் தன்னுடைய மார்க்கக் கல்வியை கற்பதற்கான உரிமை வழங்குவதேயாகும். அவளுக்கு மார்க்கக் கல்வியை ஊட்டுவது கணவன் மீதுள்ள பொறுப்புமாகும். ஒரு முஸ்லிமிடத்தில் இஸ்லாம் விரும்பக் கூடிய தன்மை எதுவென்றால், அவன் தனது மார்க்கத்தைப் பற்றிய அறிவு உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதேயாகும். தான் கற்ற அந்த மார்க்கக் கல்வியில், தன்னால் இயன்றதை தனது மனைவிக்கு அவன் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஆனால் இன்றைக்கு நமது சமூகத்தில் எத்தனை ஆண்கள் மார்க்கக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள் என்றால், நிலைமை தலைகீழாகத் தான் இருக்கின்றது. ஆண்களும் மார்க்கக் கல்வியைக் கற்பதில்லை. பெண்களும் அதனைக் கற்பதில்லை. இன்னும் சில குடும்பங்களில் ஆண் மார்க்கக் கல்வியைக் கற்றிருந்து, தனது மனைவியை அதன்படி வாழத் தூண்டினால், அதனை அவள் ஏற்றுக் கொள்வதுமில்லை. இன்னும் சில குடும்பங்களில் மனைவி மார்க்கக் கல்வி கற்றிருப்பாள், ஆனால் அவள் கற்ற அந்த மார்க்கக் கல்வியின் பிரகாரம் வாழ்வதற்கு கணவன் அனுமதிப்பதில்லை.

எனவே, கணவனும் மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வதோடு, மனைவிக்கும் அத்தகைய உரிமையை அவன் வழங்க வேண்டும். மனைவி மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், பின் யார் அவர்களது குழந்தைகளுக்கு அந்தக் கல்வியை ஊட்டுவார்கள்? மார்க்கக் கல்வி இல்லாத பிள்ளைகளினால் தான் இன்றைக்கு பல குடும்பங்களில், பிரச்னையே தலையெடுக்கின்றது.

இன்னும் மார்க்கக் கல்வி கற்ற பெண்தானே, கணவனது அமானிதங்களைப் பாதுகாக்க முடியும்? இன்னும் மார்க்கக் கல்வி கற்ற மனைவியினால் தானே பொறுப்பான பிள்ளைகளை வளர்க்க முடியும்? இன்னும் மார்க்கக் கல்வி கற்ற மனைவி தானே, இஸ்லாத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காக தன்னுடைய குழந்தைகளுக்கு அதனை ஊட்டி வளர்க்க முடியும்?
மேலே சொன்ன விவகாரங்களுக்கு வழிகாட்ட அவளுக்கு இயலவில்லை, அதற்கான மார்க்க அறிவை நீங்கள் அவளுக்கு வழங்கவில்லை என்று சொன்னால், அத்தனை விவகாரங்களிலும் பிரச்னைகள் தலைதூக்க வழி இருக்கின்றது என்பதை மட்டும்; நீங்கள் மனதில் கொள்ளுங்கள். இன்னும் சில கணவர்கள் தங்களது மனைவிமார்களை வெளியில் கூட அழைத்துச் செல்வதில்லை. வெளியில் அழைத்துச் சென்றால் எங்கே வெளியில் உள்ள தாக்கங்கள் வீட்டிற்குள் வந்து விடுமோ எனப் பயந்து அழைத்துச் செல்வதில்லை. இன்னும் சில குடும்பங்களில் உள்ள பெண்களிடம் இறையச்சம் அதிகமாக இருந்து விட்டால், அதன் காரணமாகவே அவளை வீட்டில் அடைத்து வைத்து விடுகின்றார்கள். காரணம், இவனது பலவீனங்கள், குணங்கள், கெட்ட நடத்தைகள் எங்கே இவளுக்குத் தெரிந்து விடுமோ எனப் பயந்து, அவளை வெளியில் தன்னுடன் அழைத்துச் செல்வதில்லை.

நமக்கு நேரம் இல்லை எனினும், இஸ்லாமிய கருத்தரங்குகள் நடக்கின்ற அருகில் உள்ள இடங்களுக்கு அவளைச் செல்ல அனுமதிக்கும் போது, அவள் கற்றுக் கொண்டவற்றில் இருந்து நீங்களும் கற்றுக் கொள்ளலாம் அல்லவா!
இஸ்லாத்தை விளங்கி அதன்படி நடக்க முற்படுகின்ற குடும்பங்களில் பிரச்னைகள் தலைதூக்குவது என்பது மிகவும் அரிதானது. யாரும் யாரையும் விட உயர்ந்தவரல்லர், அனைவரும் சம உரிமை உள்ளவர்கள் தான் என்ற மனோபாவம் இருவரிடமும் வளர்ந்து விட்டாலே, குடும்பத்தில் சந்தோஷம் தலைத்தோங்குவதோ, இன்னும் குடும்பத்தில் உள்ள மற்ற அங்கத்தினர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து சந்தோஷமான வாழ்வை வாழ வழி வகுப்பதாக இருக்கும்.

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர் அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள் தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:6)
ஒரு முஸ்லிம் தன்னுடைய குடும்பத்தினருக்குச் செய்ய வேண்டிய மிகப் பெரிய உதவி என்னவென்றால், அவர்களை நரக நெருப்பில் இருந்து காப்பதாகத் தான் இருக்கும். நம்முடைய குடும்பத்தாருக்கும், நம்மைச் சூழ உள்ளவர்களுக்கும் நாம் ஒரு முன் மாதிரிமிக்க இஸ்லாமியனாக வாழ்ந்து காட்டுவதன் மூலமும், அவர்களையும் இஸ்லாமியப் பாதைக்குக் கொண்டு வருவதன் மூலமும் மாத்திரமே இன்றைக்கு இந்த இஸ்லாமிய உம்மத் அடைந்திருக்கின்ற மிகப் பெரிய வீழ்ச்சியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும். எங்கெல்லாம் இந்த நம்முடைய இஸ்லாமிய சமூகம் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றதோ அங்கெல்லாம், இஸ்லாமிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாகும் என்பதைச் சகோதரர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணமாகும் இது.

நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எத்தனையோ சகோதரர்கள் இது பற்றி அக்கறை இல்லாமல் இருந்து கொண்டிருக்கின்றார்களே, என்ற கவலை நமக்கு வேண்டும். இன்னும் அவர்கள் பொடுபோக்காக விட்டு விட்டு, இந்த உலகமே கதி என்றிருக்கின்றார்களே என்பதற்காக நாமும் அவ்வாறு இருக்கலாமா? எனவே, உங்களைப் போலவே ஆர்வமுள்ள மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் உங்களைப் போலவே ஊக்கம் கொடுத்துச் செயல்படத் தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் செயலிழந்து கிடக்கின்றார்கள். அத்தகையவர்களைத் தேடிப் பிடியுங்கள். இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இறைவன் உங்களது வழிகளை எளிதாக்கி வைப்பான்.

நாம் நம்முடைய முயற்சியில் தளர்வுற்று விடுவோமானால், நாம் மட்டுமல்ல, நம்முடைய வழித்தோன்றல்களும் பாதிக்கப்படுவதோ, நம்முடைய பொறுப்புக்களைத் தட்டிக் கழித்தமைக்காக நாளை மறுமையில் கைசேதத்துடன் நிற்கக் கூடியவர்களாகி விடுவோம். இறைவன் நம்மைப் பாதுகாக்கட்டும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் ஒவ்வொருவரும் மேய்ப்பாளரே! ஒவ்வொரு மேய்ப்பாளரும் தனக்குக் கீழ் உள்ளவர்கள் பற்றி நாளை விசாரிக்கப்படுவீர்கள். (புகாரீ, முஸ்லிம்)
நாளை மறுமையில் நீங்கள் ஏன் உங்கள் குடும்பத்தவர்களுக்கு கல்வியைப் புகட்டாமல் இருந்தீர்கள் என்று கேட்கப்படும் பொழுது, அதற்கான பதிலை நீங்கள் தயாராக வைத்திருக்கின்றீர்களா? அங்கே எந்த சாக்குப் போக்குக்கும் இடம் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?
எனவே, சகோதரர்களே! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளது போல, நம்முடைய குடும்பத்தவர்களுக்கும் குறிப்பாக நம்முடைய மனைவிமார்களுக்கு மார்க்கக் கல்வியைத் தேடிக் கொடுப்பது நம் ஒவ்வொருவர் மீதும் தவிர்க்க இயலாத கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கி செயல்படுங்கள்.

இப்பொழுது நீங்கள் உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
என்னுடைய மனைவி எனக்கு வாழ்க்கைப்பட்டு வந்த நாளில் இருந்து இன்று வரை ஒருமுறையாவது திருமறைக்குர்ஆனின் பொருளை விளங்கி வாசித்து முடித்திருக்கின்றாளா?
ஒரு முறையேனும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்திருக்கின்றாளா?
அவற்றின் அர்த்தங்களை விளங்கி, விளங்காதது போக என்றாவது அதற்கான விளக்கத்தை, அல்லது தான் புரிந்து கொண்டதை என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றாளா?
அதில் ஏதேனும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற என்னை நாடியிருக்கின்றாளா?
தான் கற்றவற்றை தானும் பின்பற்றி, தன் குடும்பத்தவர்களுக்கும் எடுத்துரைத்து, அதனைப் பின்பற்றத் தூண்டுகோலாக இருந்தாளா?
இதில் எத்தனை கேள்விகளுக்கு நீங்களும், நானும் பதில் வைத்திருக்கின்றோம் என்பதன் மூலம் நம் குடுபம்த்தில் இஸ்லாம் எந்தளவு பிரகாச?மாக இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
இதில் நீங்கள் பலவீனமாக இருக்கின்றீர்கள் என்று சொன்னால், உங்களுக்கும் உங்களைப் படைத்த இறைவனுக்கும் இடையே தொய்வு ஏற்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் பலவீனத்தை உணர்வீர்கள் என்று சொன்னால், உங்களது முயற்சிகளுடன் இறைவனிடம் அதன் வழிகளை எளிதாக்குமாறு பிரார்த்தனை செய்யுங்கள்.
உங்களிடம் ஏற்படுகின்ற மாற்றம் நாளைய இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வழி வகுக்கும். அந்த மறுமலர்ச்சியைத் தான் இன்றைய உலகும் எதிர்நோக்கி இருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் கீழ்க்கண்ட தலைப்புகளில் வரும் மாதங்களில் இதன் தொடரைப் பார்ப்போம்.
சொல்வதை அழகாகச் சொல்லுங்கள்
மனைவி - மிகச் சிறந்த ஆலோசகர்
இறக்கமுள்ள உதவியாளர்
உடல் நலம், மனநலம்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters